ரூ.50 கோடியில் மழைநீர் வடிகால் பணி: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஆய்வு

By KU BUREAU

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓஎம்ஆர் சாலை, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.50 கோடியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை தலைமை பொறியாளர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், பழைய மாமல்லபுரம் சாலையில் கேளம்பாக்கம் முதல் படூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க ரூ.20 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோன்று ரூ.30 கோடி மதிப்பில் திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் சாலை விரிவாக்கப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் சிறிய சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகளும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் சத்ய பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பருவ மழை தொடங்குவதற்கு முன் பணிகளை விரைந்து, தரமாக முடிக்க துறை சார்ந்த அதிகாரியிடம் அறிவுறுத்தியுள்ளார்.

ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் தனசேகர், செங்கல்பட்டு உதவி செயற்பொறியாளர் லெனின், துறை அதிகாரிகள் உடனிருந்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE