கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.20 ஆக குறைந்தது

By ச.கார்த்திகேயன்

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று (ஆக.11) கிலோ ரூ.20 ஆக குறைந்தது.

கோயம்பேடு சந்தையில் கடந்த சில மாதங்களாக தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்த வண்ணம் இருந்தது. மொத்த விலையில் கிலோ ரூ.70 வரை உயர்ந்தது. திருவல்லிக்கேணி ஜாம்பஜார், பெரம்பூர் சந்தை, சைதாப்பேட்டை சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.100 வரை விற்பனையானது.

இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக அதன் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிலோ ரூ.20 ஆக குறைந்துள்ளது.

மற்ற காய்கறிகளான கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.40, அவரைக்காய் ரூ.35, பாகற்காய், சாம்பார் வெங்காயம், பெரிய வெங்காயம் தலா ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.28, கத்தரிக்காய் ரூ.25, புடலங்காய், முருங்கைக்காய் ரூ.15, முள்ளங்கி, முட்டைக்கோஸ், நூக்கல், பீட்ரூட் வெண்டைக்காய் ஆகிய காய்கறிகள் தலா ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது.

தக்காளி விலை குறைந்து வருவது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும்போது, தமிழகத்தை ஒட்டிய ஆந்திரா மற்றும் கர்நாடக பகுதிகளில் தற்போது வெப்பம் குறைந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. அதனால் விலை குறைந்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE