பார்முலா கார் பந்தய செலவு தொகையில் சாலையை சீரமைக்கலாம்: ஜி.கே.வாசன்

By KU BUREAU

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 2024 - 2027-ம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர் படிவத்தில் முதல் நபராக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கையெழுத்திட்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றவீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டுகள். தமிழக அரசு மக்கள் மீது தொடர்சுமையை ஏற்றியதால் மக்கள்மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த சுமையை குறைக்க அரசு பரிசீலிக்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கையின் அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டுவர மத்திய வெளியுறவுத் துறை இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினையில் அரசு சமரசம் செய்து கொள்ளக் கூடாது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். படிப்படியாக மூடும் நிலையை உருவாக்க வேண்டும். போதைப் பொருள் கலாச்சாரத்தை 100 சதவீதம் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை நிறுத்தியிருப்பது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோர், மாணவர்களின் பொருளாதாரப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டு்ம்.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர்கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏழை, எளிய, நடுத்தர இஸ்லாமியமக்களுக்கான உதவிகளை உறுதிப்படுத்தும் வகையில் தமாகா செயல்படும். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பற்றி எதிர்க்கட்சிகள் தவறாக கூறுவது ஏற்புடையது அல்ல.வக்பு வாரியத்தின் வளர்ச்சிக்காகவே சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்காக செலவு செய்யும் தொகையில், சென்னையில் மாநகராட்சியில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளுக்கு செலவு செய்தால் விபத்துகள் குறையும். மக்களும் குறித்த நேரத்தில் அலுவலகங்கள் மற்றும் இதர பணிகளுக்கும் செல்வர். திமுகவுக்கு வாக்களித்தவர்கள் அரசிடம் கார் பந்தயத்தை கேட்கவில்லை. சென்னையில் உள்ள 99.9‌ சதவீதம் பேரால் பார்முலா கார் பந்தயத்தைபார்க்க இயலாது. அதற்கான வசதியும் நேரமும் அவர்களிடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE