சென்னையில் வீடுகளின் முன்பாக வைக்கப்பட்டுள்ள நோ-பார்க்கிங் போர்டுகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - ஐகோர்ட்

By KU BUREAU

சென்னை: சென்னையில் வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள நோ-பார்க்கிங் போர்டுகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீஸார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக நந்தகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், ‘‘சென்னையில் அடையார், தி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம், மாம்பலம், அசோக்நகர், கே.கே.நகர், வேளச்சேரி, குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர் போன்ற முக்கிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் தங்களின் வீடுகள் முன்பாக எந்தவொரு அனுமதியும் பெறாமல் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை வைத்துள்ளனர். இதன்மூலம் தங்களது வீடுகளின் முன்பாக உள்ள பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என தடுத்து அவ்வப்போது தகராறு செய்து வருகின்றனர்.

சில இடங்களில் வீடுகளின் முன்பாக நோ-பார்க்கிங் அறிவிப்பு பலகையுடன் பூந்தொட்டிகளை வைத்தும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்கின்றனர். சென்னையில் வாகனங்களை நிறுத்த முறையான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால், வாகன ஓட்டிகள் வேறு வழியின்றி தங்களது வாகனங்களை நெரிசல் மிகுந்த பகுதிகளில் நிறுத்தி செல்ல நேரிடுகிறது.

இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டபோது, வீட்டின் வாசலில் நோ-பார்க்கிங் அறிவிப்பு பலகை வைக்க யாருக்கும், எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் பதிலளித்துள்ளது. எனவே வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள நோ-பார்க்கிங் என்ற அறிவிப்பு பலகைகளையும், பூந்தொட்டிகளையும் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

வழக்கு தள்ளிவைப்பு: இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னையில் நோ-பார்க்கிங் போர்டுகளை அகற்றஎன்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை இருவாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE