பரபரப்பு... அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திடீர் ராஜினாமா: முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி!

By காமதேனு

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான ஆர். சண்முகசுந்தரம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர் சண்முகசுந்தரம்

கடந்த 2021?ம் ஆண்டு மே மாதம் திமுக அரசு பதவி ஏற்றவுடன் தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். 1977-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த சண்முகசுந்தரம், தன் தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான எஸ்.ராஜகோபாலிடம் கிரிமினல் சட்டத்தில் பயிற்சி பெற்றவர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக, மாநில அரசு, சிபிஐ, ரயில்வே சார்பாக பல வழக்குகளில் இவர் வாதாடியுள்ளார்.

ஜெயலலிதா ஆட்சியில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சண்முகசுந்தரம்

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய சண்முகசுந்தரம், இங்கிலாந்து நீதிமன்றங்களிலும் பணியாற்றிய பழுத்த அனுபவம் மிக்கவர். அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த சண்முகசுந்தரம், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மிக நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தார். அதன் காரணமாகவே கலைஞர் கருணாநிதி ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தின் 4-ம் பாகத்தில் சண்முகசுந்தரம் குறித்தும் அவரது குடும்ப பாரம்பரியம் பற்றியும் எழுதியுள்ளார்.

அதேபோல், ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஜெயின் கமிஷனுக்கு உதவியாக சண்முகசுந்தரம் அரசு சார்பில் நியமிக்கப்பட்டவர். குறிப்பாக, முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி நில அபரிப்பு வழக்குகளில் அவருக்கு எதிராக முக்கியமான சட்ட பணிகளை ஆற்றியவர் சண்முகசுந்தரம்.

1995-ம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான டான்சி நில அபகரிப்பு வழக்கில் ஆவணங்களைத் திரட்டிக் கொண்டிருந்த சண்முகசுந்தரம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பின்னர் காப்பாற்றப்பட்டார்.

அதன்பிறகு, 2-6-1995-ல் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடப்படவேண்டும் என்று ஒரு தனித் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம்

இந்த அளவுக்கு நீண்ட பின்னணி கொண்ட சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். வயது முதிர்வு, வேலை பளு உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் தன்னுடைய தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ய சண்முகசுந்தரம் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

கடந்த சில மாதங்களாகவே இது குறித்து யோசித்துவந்த சண்முகசுந்தரம், தற்போது ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும், தமிழக அரசிடமும் தகவலை தெரிவித்து விட்டதாக அவர் கூறியுள்ளார். அவரின் இந்த ராஜினாமா முடிவு திமுக மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE