ஈகோ பார்க்காதீங்க... போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தில் அரசுக்கு ராமதாஸ் அட்வைஸ்!

By காமதேனு

ஈகோவை கைவிட்டு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும். அவர்களின் ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றி மற்ற கோரிக்கைகள் தொடர்பாக வாக்குறுதி அளித்து வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில், ‘போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடும் பாதிப்பு: தன்முனைப்பு பார்க்காமல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!

15-ம் ஊதிய ஒப்பந்த பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

வேலை நிறுத்தத்தால் பாதிப்பு இல்லை என்றும், மாநிலம் முழுவதும் 93.90 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. ஆனால், களநிலைமை வேறாக உள்ளது. நகரப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கூட, ஊரகப்பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் போது, அதில் உள்ள நியாயங்களை உணர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் சரியான உத்தி ஆகும். மாறாக, வேலை நிறுத்தத்தை முறியடித்துவிட்டோம் என்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது சரியல்ல. புரையோடிப் போன புண்ணை புணுகு போட்டு மறைக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.

கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும் தொழிற்சங்கங்கள் , தங்களின் நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்து , இப்போதைக்கு ஓய்வூதியர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்கிறார்கள். 96 மாதங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.2 ஆயிரம் கோடியை எவ்வாறு வழங்குவது என்பதைக் கூட பின்னர் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளன.

அகவிலைப்படி உயர்வு கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற மாதத்திற்கு சுமார் ரூ.20 கோடி மட்டுமே கூடுதலாகச் செலவாகும். இந்தக் கோரிக்கையைக் கூட நிதிநிலையைக் காரணம் காட்டி நிறைவேற்ற மறுப்பது நியாயமல்ல. போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசுக்கு எதிரிகள் அல்ல. அவர்களும் போக்குவரத்து சூழல் அமைப்பின் ஓர் அங்கம் தான்.

அவர்கள் இல்லாமல் அரசோ, அரசு இல்லாமல் அவர்களோ செயல்பட முடியாது. இதை உணர்ந்து தன்முனைப்பை (ஈகோ) கைவிட்டு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும். அவர்களின் ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றி மற்ற கோரிக்கைகள் தொடர்பாக வாக்குறுதி அளித்து வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

விசிக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும்?: திருமாவளவன் பரபரப்பு பேட்டி

சென்னையில் பரபரப்பு... வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைு!

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்... பொதுமக்கள் தவிப்பு!

ரூ.1 லட்சம் சன்மானம்... காணாமல் போன பூனையை போஸ்டர் ஒட்டி தேடும் வினோதம்

அதிகாலை துயரம்... இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE