இலங்கை கடற்கொள்ளையர் தாக்கியதில் வேதாரண்யம் மீனவர்கள் காயம்

By KU BUREAU

நாகப்பட்டினம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் வேதாரண்யம் மீனவர்கள் 5 பேர் காயமடைந்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவக் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் விமலா என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த பாக்கியராஜ், அமுதகுமார், அன்பழகன், சாணக்கியன், நாகராஜ் ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகில் வந்த, இலங்கையைச் சேர்ந்த 5 கடற்கொள்ளையர்கள் இவர்களது படகில் ஏறி, கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, மீன்கள், செல்போன், டார்ச் லைட் உள்ளிட்டபொருட்களையும், மீன்பிடி வலைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து, 5 மீனவர்களும் அவசரமாக கரைக்கு வந்து சேர்ந்தனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் 5 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தலையில் காயமடைந்த அன்பழகன், உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 4 மீனவர்களும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

வேதாரண்யம் மீனவர்கள் கடல் கொள்ளையரால் தாக்கப்பட்ட சம்பவம் நாகை மாவட்ட மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் குழும போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE