எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் பாம்பன் மீனவர்கள் 33 பேர் கைது

By KU BUREAU

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனைச் சேர்ந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். மேலும், 4 நாட்டுப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சூசை மார்டின் ஆகியோருக்குச் சொந்தமான 4 நாட்டுப் படகுகளில், 33 மீனவர்கள் கடந்த 6-ம் தேதி பாம்பன் வடக்கு துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் நேற்று மாலை மன்னார் தென்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஜோன்சன், இன்னாசி, கிரீன்சன், ஆரோக்கியம், சேந்திடிக்கல் உள்ளிட்ட 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

4 படகுகள் பறிமுதல்: மேலும், 4 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மீனவர்களை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்படை தளத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தமிழக மீனவர்கள் 13 பேரை ஊர்காவல்துறை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்த நிலையில், 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது ராமேசுவரம் மற்றும் பாம்பன் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீன்பிடி தடைக் காலத்துக்குப் பின்னர் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 109 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் 52 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர், 12 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 45 மீனவர்கள் இலங்கையில் நீதிமன்றக் காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE