மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 12,000 கன அடி தண்ணீர் திறப்பு

By KU BUREAU

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர்திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின.இதையடுத்து, கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரிநீர்திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக கடந்த 27-ம்தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததால், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 28-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

அப்போது அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.51 லட்சம் கனஅடியாகவும், நீர்மட்டம் 110.76 அடியாகவும், நீர் இருப்பு 79.49 டிஎம்சியாகவும் இருந்தது. பின்னர், கடந்த29-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 23,000 கனஅடி வரைதண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

இதற்கிடையில், அதிக நீர்வரத்து காரணமாக கடந்த 30-ம்தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்து சரிந்ததால் உபரிநீர் வெளியேற்றம் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது.

பின்னர், அணையின் நீர்மின்நிலையங்கள் வழியாக டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது 21,500 கனஅடியில் இருந்து10,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி டெல்டாமாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்ததால் நேற்று காலை 9 மணி முதல் விநாடிக்கு 12,000 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

ஒகேனக்கல்லில்... தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 6 மணி அளவில் விநாடிக்கு 7,000 கனஅடியாக குறைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE