மீஞ்சூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம், பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், அரியன்வாயில் பகுதியை சேர்ந்தவர்கள் வசந்த் - வள்ளி தம்பதி. இவர்களுக்கு 2 வயதில் கீர்த்தனா என்ற மகள் இருந்தார். வழக்கம் போல குழந்தை கீர்த்தனா நேற்று மாலை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக, வீட்டின் எதிரே இருந்த தண்ணீர் தொட்டியில் கீர்த்தனா தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த கீர்த்தனாவின் மாமா, கீர்த்தனாவை தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டு மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட கீர்த்தனா, மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு குழந்தை கீர்த்தனாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதனிடையே, குழந்தை கீர்த்தனா உயிரிழப்பு குறித்து மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE