விருத்தாசலம் அருகே தனியார் பள்ளி தலைமை ஆசிரியரை அரை நிர்வாணமாக்கி அடித்த கிராம மக்கள்!

By க. ரமேஷ்

கடலூர்: விருதாச்சலம் அருகே உள்ள எருமனூர் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 2023 -24 கல்வி ஆண்டில் அதே ஊரைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார். பள்ளியில் படிக்கும் போது அந்த மாணவி பள்ளியின் தலைமை ஆசிரியர் கடலூரைச் சேர்ந்த எடில்பர்ட் பெலிக்ஸ் (40) என்பவருடன் நெருங்கி முத்தம் கொடுப்பதை போல் செல்ஃபி எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இது எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அந்த மாணவியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பள்ளி முடிந்து இன்று மாலை சுமார் ஆறு மணி அளவில் தலைமை ஆசிரியர் வெளியே வந்து அவரது காரில் ஏற முயன்ற போது, எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தலைமை ஆசிரியரை பிடித்து அடித்து ஆடைகளை கழற்றி உள்ளாடையுடன் பள்ளியில் இருந்து எருமனூர் கிராமம் வரை அடித்துக் கொண்டே இழுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் அக்கிராமத்தினர் பள்ளி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் எருமனூர் கிராமத்திற்கு சென்று போராட்டத்தை ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE