புதுச்சேரி: கடல் அலையில் சிக்குவோரை மீட்க 39 உயிர்காக்கும் காவலர்கள் நியமனம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கடலில் அலையில் சிக்குவோரை மீட்கவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதியும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், நீச்சல் மற்றும் மீட்புப் பணிகளில் பயிற்சி பெற்ற 39 உயிர் காக்கும் காவலர்கள் (Life Guards) பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

புதுச்சேரியில் கடலில் அலையில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், அலையில் சிக்குவோரை மீட்கும் பணியில் ஆட்களை நியமிக்க கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில், முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, 39 உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அமைச்சர் லட்சுமி நாராயணன், மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவர்கள் பணி தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "இந்த உயிர் காக்கும் காவலர்கள், தலைமைச் செயலகம் அருகில் உள்ள கடற்கரை, லே கபே உணவகம் அருகில் உள்ள கடற்கரை, பார்க் கெஸ்ட் ஹவுஸ் அருகில் உள்ள கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, புதுக்குப்பம் பாரடைஸ் கடற்கரை ஆகிய இடங்களில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்" என்று அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE