புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் கருணாநிதி உருவப் படத்திற்கு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மலர் தூவி அஞ்சலி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவுநாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அவரது உருவப்படத்துக்கு முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

புதுவை அரசு சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதற்காக சட்டப்பேரவை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் சாய் சரவணக்குமார், பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, திமுக எம்எல்ஏ-க்கள் ஏ.எச்.எம். நாஜிம்,அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியாகராஜன், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக அமைதிப் பேரணி: புதுச்சேரி மாநில திமுக சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி சுதேசி மில் அருகில் இருந்து, மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் திமுக–வினர் அமைதிப் பேரணியாக சென்று அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநி உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், திமுக மாநில அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி திமுக சார்பில் கருணாநிதி உருவப் படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE