சாலை விபத்துகளை முற்றிலும் குறைக்க ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ விழிப்புணர்வு திட்டம்: இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் அறிமுகம்

By KU BUREAU

சென்னை: சாலை விபத்துகளை முற்றிலும் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தை போக்குவரத்து போலீஸார் சென்னையில் தொடங்கி உள்ளனர்.

சாலைகளில் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதிசெய்ய, சென்னை போக்குவரத்து போலீஸார், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ‘ஜீரோ இஸ் குட்’ (ZERO IS GOOD) என்ற பெயரில் சென்னைமுழுவதும் நூதன விளம்பரம் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வை மேற்கொண்டனர்.

அதாவது விதிமீறல், அபராதம், விபத்து, விபத்து உயிரிழப்பு என அனைத்தும் ஜீரோவானால் விபத்துகள் இன்றி விபத்து மரணங்கள் ஜீரோவாகி விடும் என்பதை மையமாக வைத்து இதுபோன்ற விழிப்புணர்வை போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டிருந்தனர்.

அதன்தொடர்ச்சியாக இந்தியாவிலேயே முதன்முறையாக, சாலை விபத்துகளை குறைக்க, வாகன ஓட்டிகளிடையே சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ‘விபத்தில்லா தினம்’ (ZERO ACCIDENT DAY) என்ற பெயரில்மெகா விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை மாநகர போக்குவரத்து போலீஸார் நேற்று தொடங்கியுள்ளனர்.

ஆக.26-ம் தேதிவிபத்தில்லா தினம் கொண்டாடப்பட உள்ளது. அதுவரை பள்ளி, கல்லூரி, ஐ.டி ஊழியர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் போக்குவரத்து போலீஸார் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், விபத்தில்லா தின விழிப்புணர்வு திட்டத்தை சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், திருவல்லிக்கேணி பல்லவன் பேருந்துபணிமனையில் நேற்று காலைதொடங்கி வைத்தார். மேலும், 20முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாகவிபத்தை ஏற்படுத்தாமல் அரசு பேருந்துகளை இயக்கிய 5 ஓட்டுநர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: முதல்வரின் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் தொடர்ச்சியாக சென்னை போக்குவரத்து காவல்துறை ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரத் திட்டத்தை தொடங்கி உள்ளது.

ஒரு நாளாவது விபத்து இல்லாத நாளாக இருக்க வேண்டும் என்பதற்காக வரும் 26-ம் தேதி ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் விபத்து, விபத்து உயிரிழப்பு ஏதும் இல்லாமல் இருக்க இதுபோன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இது ஒரு புதிய முயற்சி. இதுவெற்றி பெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். அனைத்து நாட்களும் விபத்தில்லா நாட்களாக இருப்பதே எங்களது இலக்கு. விபத்து இல்லாத நாளாகமாற்ற அனைத்து வாகன ஓட்டிகளும், மக்களும் ஒத்துழைக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

ரூ.1 லட்சம் பரிசு: சாலை விபத்துகளை முற்றிலும் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை போக்குவரத்து போலீஸார், ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று தொடங்கினர். வரும் 26-ம் தேதி வரை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற உள்ளது.

இந்த 20நாட்களில் எந்த விதமான விபத்துமற்றும் விதி மீறல்கள் நடைபெறாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம்பரிசு வழங்கப்படும் என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE