22 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

By KU BUREAU

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றது. இதற்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தியும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 21-ம் தேதி 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதே போல் மற்றொரு படகில் 23-ம் தேதி 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

அவர்கள் இரண்டு விசைப்படகுகளிலும் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 22 தூத்துக்குடி மீனவர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம், தருவைகுளம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு படகுகள் மற்றும் மீனவர்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE