பட்டுத் துணிகளில் சில்க் மார்க் முத்திரையை சோதித்து வாங்க வேண்டும்: இந்திய சில்க் மார்க் நிறுவனம் வலியுறுத்தல்

By ப.முரளிதரன்

சென்னை: பட்டுத் துணி வகைகள் வாங்கும் போது சில்க் மார்க் முத்திரை உள்ளதா என பொதுமக்கள் கேட்டு பார்த்து வாங்க வேண்டும். இதன் மூலம், மோசடிகளை தவிர்க்க முடியும் என இந்திய சில்க் மார்க் நிறுவனத்தின் உதவி செயலாளர் கே.எச்.ஹேமாஸ்ரீ கூறியுள்ளார்.

மத்திய ஜவுளித் துறையின் கீழ் செயல்படும் மத்திய பட்டு வாரியத்தின் இந்திய சில்க் மார்க் நிறுவனம் மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் இணைந்து சில்க் மார்க் குறித்த விழிப்புணர்வு முகாம், சென்னை, அம்பத்தூரில் உள்ள அன்னை வயலெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சில்க் மார்க் நிறுவனத்தின் உதவி செயலாளர் கே.எச்.ஹேமாஸ்ரீ பங்கேற்று பேசியதாவது:"இந்தியா இரண்டாவது பெரிய பட்டு உற்பத்தி செய்யும் நாடு மற்றும் உலகின் மிகப்பெரிய நுகர்வோர் நாடாகவும் உள்ளது. இந்தியாவில் பட்டுத் துணி உற்பத்தி தொழில் ஒரு குடிசைத் தொழிலாகும். நாட்டின் 25 மாநிலங்களில் உள்ள 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மல்பெரி, தாசர், எரி மற்றும் முகா ஆகிய 4 வகையான பட்டுகள் உள்ளன.

இவை அனைத்தையும் உற்பத்தி செய்யும் ஒரே நாடு இந்தியா. இந்திய சில்க் மார்க் நிறுவனம், கடந்த 2004ம் ஆண்டு புதிய சில்க் மார்க் முத்திரையை அறிமுகப்படுத்தியது. போலியான பட்டினை வாங்குவதில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கவும், பட்டுத் தொழிலை பாதுகாத்து, பட்டு சார்ந்த தொழிலில் ஈடுபடுவோரின் நலனை காப்பது இந்த சில்க் மார்க் முத்திரையின் நோக்கமாகும். சில்க் மார்க் லேபிளில் உள்ள ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பொதுமக்கள் வாங்கும் பட்டு தூய்மையானதா இல்லையா என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.

எனவே,பட்டு துணி வகைகள் வாங்கும் போது சில்க் மார்க் முத்திரை உள்ளதா எனக் கேட்டு பார்த்து வாங்க வேண்டும். இதன் மூலம், மோசடிகளை தவிர்க்க முடியும். சில்க் மார்க் லேபிள் இடப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகள் நாடு முழுவதும் உள்ளனர்" என்று ஹேமாஸ்ரீ கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் டி.சடகோபன், "தங்க நகைகளின் தரத்தை அறிய ஹால்மார்க் முத்திரை, உணவுப் பொருட்களின் தரத்தை அறிய அக்மார்க், மின்சாதன பொருட்களின் தரத்தை அறிய ஐஎஸ்ஐ முத்திரை ஆகியவை எவ்வாறு கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ, அதேபோல், பட்டு துணி வகைகளின் தரத்தை அறிய சில்க் மார்க் முத்திரையை கட்டாயமாக்க வேண்டும்’ என்று கூறினார்.

இந்நிகழ்வில், இந்திய சில்க் மார்க் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற துணை இயக்குனர் வி.ரமேஷ், அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இனிதா லீபனோன் எபன்சி, துணை முதல்வர் ஜாபியா சாலமன், நுகர்வோர் குழு ஒருங்கிணைப்பாளர் க.ஜா.பிரிசில்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE