தென்காசி அருகே கோயிலில் தீ விபத்து: இருசக்கர வாகனங்கள், டிராக்டர் சேதம்

By KU BUREAU

தென்காசி: தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளன்குளம் கிராமத்தில் பூலுடையார் அய்யனார் கோயில் உள்ளது. பூலுடையார் அய்யனார் கோயிலில் இன்று திருவிழா நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆட்டுக்கிடாவுடன் அங்கு தற்காலிக பந்தல் அமைத்து தங்கியிருந்தனர். சமையல் செய்தபோது பந்தலில் தீ பிடித்ததாகக் கூறப்படுகிறது. பலத்த காற்றில் தீ மளமளவென வேகமாக பரவியது. உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தல் முழுவதும் தீ பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு டிராக்டர் சேதமடைந்தன.

மேலும், நேர்த்திக்கடனுக்காக கொண்டு வந்த சில ஆடுகளும் தீக்காயமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து சேர்ந்தமரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE