அதிமுக முன்னாள் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் குட்கா வழக்கில் செப்.9-ல் ஆஜராக சம்மன்

By KU BUREAU

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆனையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட 21 பேர் வரும்செப். 9-ம் தேதி ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன்பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்கப்பட்டது தொடர்பாக டெல்லி சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் குட்கா குடோன் உரிமையாளர்களான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிசெந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரிசிவக்குமார் ஆகிய 6 பேருக்கு எதிராகசென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறை முன்னாள்ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில உயர்அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் தவறுகளை சரிசெய்தும், விசாரணைக்கான ஒப்புதல் உள்ளிட்ட ஆவணங்களுடன் திருத்திய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு சிபிஐசிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சிபிஐ சார்பில் திருத்தம்செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஏற்கெனவே கைதான 6 பேருடன் மத்திய, மாநில அரசு அதிகாரிகளான ஆர். சேஷாத்ரி, குல்சர் பேகம், அணீஷ் உபாத்யாய், வி.ராமநாதன், ஜோஸ் தாமஸ், பி.செந்தில்வேலவன், அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாஎன்ற பி.வெங்கடரமணா, வணிகவரித்துறை இணை ஆணையராக பதவி வகித்த வி.எஸ்.குறிஞ்சிச்செல்வன், வணிக வரித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்த எஸ்.கணேசன், முன்னாள்அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,ஏ,சரவணன், சுகாதாரத்துறை அதிகாரிகளான லக்ஷ்மி நாராயணன், பி.முருகன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், வி.கார்த்திகேயன், காவல்துறை உதவி ஆணையராக பதவி வகித்த ஆர். மன்னர் மன்னன், காவல் ஆய்வாளராக பதவி வகித்த வி.சம்பத், ஏ.மனோகர், மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்த ஏ.பழனி, கே.ஆர்.ராஜேந்திரன் ஆகிய 21 பேர் என மொத்தம் 27 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் நீதிபதி சி. சஞ்சய் பாபா முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் உள்ள மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிசெந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 5 பேர் மட்டும் ஆஜராகியிருந்தனர்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் 21 பேர் மீது கூடுதலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட அனைவரும் செப். 9-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE