மூதாட்டி, மாற்றுத்திறனாளியை தாக்கி நகை, பணம் பறித்த மர்ம கும்பல்: திருத்தணியில் பரபரப்பு

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: மர்மகும்பல் ஒன்று மூதாட்டியையும், மாற்றுத்திறனாளியையும் தாக்கி நகை மற்றும் பணத்தைப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பம்மாள்(65). வீடுகளில், வீட்டு வேலை செய்துவரும் இவர், இன்று அதிகாலை திருத்தணி பஜார் பகுதியில் வீட்டுவேலை செய்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் தர்மராஜா கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று குப்பம்மாளை தாக்கி, அவர் அணிந்திருந்த மூக்குத்தி மற்றும் மணி பர்ஸ் ஆகியவற்றை பறித்தது.

தொடர்ந்து, அந்த கும்பல், கோயில் அருகே தங்கியிருந்த மாற்றுத்திறனாளியான, திருப்போரூரைச் சேர்ந்த பலராமனையும் தாக்கி, அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தைப் பறித்துக்கொண்டு தப்பியோடியது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த குப்பம்மாள், பலராமன் ஆகியோரை, அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குப்பம்மாளும் பலராமனும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, திருத்தணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE