அரசாணை ரத்து: மோசடி சொத்துப் பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளரே நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் தடை!

By KU BUREAU

சென்னை: மோசடி சொத்துப் பத்திரங்கள் குறித்து புகார் வந்தால், அதன் மீது மாவட்ட பதிவாளரே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தின், பிரிவு 77 ஏ மற்றும் பிரிவு 77 பி ஆகிய 2 உட்பிரிவுகளை கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சேர்த்தது. இதன்படி போலியான, தவறான சொத்து பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தால், அவர் விசாரித்து, குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால், அந்த பத்திரங்களை செல்லாது என்று அறிவித்து உத்தரவு பிறப்பிக்கலாம்.

இந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக் கோரி புதுக்கோட்டை வளர்மதி, திருச்செங்கோடு நித்யா பழனிச்சாமி, விழுப்புரம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, “தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு பத்திர பதிவு சட்டத்தில் புதிதாக கொண்டு வந்துள்ள பிரிவு 77-ஏ, 77-பி ஆகிய பிரிவுகளின்கீழ் போலியாக பதியப்பட்ட பத்திரங்களை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யலாம் என்றும், அதுதொடர்பான மேல்முறையீட்டை பத்திர பதிவு துறை தலைவர் விசாரிக்கலாம் என்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு முறைகேடுகளுக்கும் இது வழிவகுத்துள்ளது. எனவே, இந்த சட்ட திருத்தம் செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்’ இவ்வாறு அதில் கோரியிருந்தனர்.

மேற்கண்ட வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், “போலி பத்திரம் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தால் அந்த பத்திரம் செல்லாது என அறிவிக்கும் தமிழக அரசு அரசாணையை ரத்து செய்து உத்தரவிடுகிறோம். தமிழக அரசு கொண்டு வந்த 77ஏ, 77 பி ஆகிய சட்ட பிரிவுகள் செல்லாது. அந்த பிரிவுகளை ரத்து செய்கிறோம்” இவ்வாறு உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE