குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கில பெயர்: மத்திய அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

சென்னை: மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தை `பாரதிய நியாய சன்ஹிதா' என்றும், குற்ற விசாரணை முறைச் சட்டத்தை `பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா' என்றும், இந்திய சாட்சிகள் சட்டத்தை `பாரதிய சாக்‌ஷிய அதிநியம்' என்றும் பெயர் மாற்றம் செய்து, பல்வேறு திருத்தங்களுடன் இந்த சட்டங்கள் நாடு முழுவதும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டன.

அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக, புதிய சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைத்திருப்பது தவறானது என அறிவித்து, புதிய சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயியான ஜீவன்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ``இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348-வது பிரிவின்படி, நாடாளுமன்றத்தின் அனைத்து குறிப்புகளும் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு முரணாக இந்த 3 புதிய சட்டங்களின் பெயர்களும் இந்தியில் உள்ளன. மேலும் புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்களைப் புரிந்து கொள்வதில் மட்டுமின்றி, உச்சரிப்பதிலும் சிரமம் உள்ளது. ஆகவே, இந்தச் சட்டங்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவாக ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு, ``இது தொடர்பாக மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டு, இந்த வழக்கை ஏற்கெனவே நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE