ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் விநியோகிக்கும் முறை சேலத்தில் தொடக்கம்

By KU BUREAU

சென்னை: நியாயவிலைக்கடைகளில் பொதுவிநியோகத்திட்டப் பொருட்களான அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பை பாக்கெட் மூலம் விநியோகிக்கும் தி்ட்டம் சேலத்தில் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், 234 தொகுதிகளிலும் தலா ஒரு கடைக்கு சோதனை அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் 36,954 நியாயவிலைக்கடைகள் மூலம் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பச்சரிசி, புழுங்கல் அரிசிஆகியவை இலவசமாகவும், சர்க்கரை, மண்ணெண்ணெய் மானிய விலையிலும், சிறப்பு பொது விநியோகத்திட்ட பொருட்களான பாமாயில்,துவரம்பருப்பு ஆகியவை மானியவிலையிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

பொருட்களில் பாமாயில் மட்டும்பாக்கெட்டில் வழங்கப்படுகிறது. மீதமுள்ளவை குடும்ப அட்டைதாரர்கள் கொண்டு வரும் பைகளில் மின் தராசு மூலம் எடையிடப்பட்டு வழங்கப்படுகிறது. இவ்வாறாக வழங்கப்படும்போது எடை குறைவாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. இப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் பொது விநியோகத்திட்ட பொருட்களை பாக்கெட்டில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுசட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் முதல்கட்டமாக, சேலம் மாவட்டம் ஸ்ரீரங்கபாளையம் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் இந்த திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த கடையில், தலா ஒருகிலோ எடையில் துவரம்பருப்பு, சர்க்கரைஅரை கிலோ முதல் பல்வேறு அளவுகளில் பிளாஸ்டிக் கவர்களிலும், அரிசி 10 கிலோ முதல் பிளாஸ்டிக் சாக்குப் பைகளிலும் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் வந்து கேட்கும்போது எடைக்கேற்ற பை எடுத்து தரப்படுகிறது.

முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒரு கடை தேர்வுசெய்யப்பட்டு அந்த கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி, பருப்பு,சர்க்கரை ஆகிய அத்தியாவசியப்பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளது.

பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் மற்ற பகுதிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த கூட்டுறவு,உணவுத்துறைகள் முடிவெடுத்துள்ளன.

இதுதொடர்பாக, நியாயவிலைக்கடை பணியாளர்கள் கூறும்போது, ‘‘தற்போது துறையின் சார்பில் பாக்கெட்டுகளாக பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையே தொடர்ந்தால், எடை தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிப்பது தவிர்க்கப்படும்’’ என்றனர்.

ஜூலை மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள் ஆகஸ்டில் பெற்றுக் கொள்ளலாம்: உணவுப்பொருள் வழங்கல் இயக்குநர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நியாயவிலைக் கடையில் ஜுன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜூலை மாதம் பெறலாம் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, ஜூலை மாதம் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், பொருட்கள் முழுமையாக கடைகளுக்கு அனுப்பப்படாததால், குடும்ப அட்டைதாரர்களால் ஜுலை மாதத்துக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை.

ஆதலால், ஜுலை மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE