`பொதுவெளியில் இப்படி பேசுவது அழகல்ல'- ஆளுநருக்கு எதிராக சீறும் அதிமுக

By காமதேனு

"மக்களுடைய உணர்வுகளின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. உயர்ந்த பதவியில் இருக்கும் ஆளுநர் பொதுவெளியில் இப்படி பேசுவது அழகல்ல” என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ விமர்சித்தார்.

கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக கட்சி அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கிய அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், ''அதிமுகவின் பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு எங்கு சென்றாலும் தொண்டர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக ஆளுநர் ரவி பேசும்போது வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று ஆலையை மூட சதி நடந்ததாக கூறியுள்ளார். மக்களுடைய உணர்வுகள் அடிப்படையில் கடந்த கால அரசுகள் அந்த முடிவுகளை எடுத்தது. உயர்ந்த பதவியில் இருக்கும் தலைவர் பொதுவெளியில் இப்படி பேசுவது அழகல்ல. மக்களின் உணர்வுகளை, நியாயமான கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றினர். முடிந்து போன நிகழ்வைப் பற்றி பேசுவது வேதனை அளிக்கிறது. நாட்டின் வளர்ச்சியை தடுக்க வெளிநாடுகளில் இருந்து எப்படிப்பட்ட சதி வந்தாலும் அதை நாட்டின் பிரதமர் மோடி முறியடிப்பார். அவர், தன் கடின உழைப்பாலும், மக்களை காக்கும் நடவடிக்கைகளாலும் உலகத் தலைவராக உயர்ந்து வருகிறார். இந்தியாவை தலைநிமிர செய்து வருகிறார்.

அந்நிய நாட்டில் இருந்து பணம் வருவதை அவர் தடுப்பார். அதுபோன்ற நடவடிக்கையில் யாரும் ஈடுபட்டாலும் அவர்களையும் கைது செய்வார். இதேபோல தமிழக அரசு இயந்திரம், அதிகாரிகளும் இந்த விஷயத்தை சிறப்பாக கையாளுவார்கள். மசோதாக்கள் குறித்து ஆளுநர் பேசியது அவருடைய கருத்து. அதைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. அதிமுக ஈபிஎஸ் தலைமையில் மட்டுமே செயல்படுகிறது. அவரின் கீழ் ஒன்றரை கோடி தொண்டர்களும் இயங்குகின்றனர். கட்சியை விட்டு வெகு தூரம் சென்றவர்களை குறித்து, பேசுவதையோ கருத்து கூறிவோ விரும்பவில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE