‘பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் புறக்கணிப்பு’ - பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் கோவையில் ஆர்ப்பாட்டம்

By இல.ராஜகோபால்

கோவை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில், கோவை மத்திய தந்தி அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்க அமைப்பினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் பங்கேற்றோர் சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆண்டு பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுடைய தேவைகளை அறிந்து சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக மோடி அரசு தங்களுடைய ஆட்சி மற்றும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாடு மற்றும் கேரள உள்ளிட்ட பல மாநிலங்களை புறக்கணித்துவிட்டு பீகார் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்கி உள்ளனர்.

ஜிஎஸ்டி உள்ளிட்ட அதிக வரியை செலுத்தி வரும் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. எந்த பட்ஜெட்டிலும் இப்படி ஒரு மாநிலம் புறக்கணிக்கப்பட்டது கிடையாது. விவசாய விளை பொருட்களுக்கு விலை நிர்ணய சட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. அதானி, அம்பானி குடும்பங்கள் மேலும், மேலும் வளர்வதற்கு உதவும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. எனவே பட்ஜெட்டை வன்மையாக கண்டிக்கிறோம்." என்று முத்தரசன் கூறினார்.

தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் (சிபிஎம்) ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது: "வேலையில்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கோ, நலிந்து வரும் விவசாயம், சிறு, குறு தொழில்களை பாதுகாக்க நிதி ஒதுக்கவில்லை. விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்படவில்லை. உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு 47 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் வேலை வாய்ப்பின்மை எந்த அளவுக்கு உள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

வேலை வாய்ப்பை அதிகரிக்க பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் இருக்கக் கூடிய பட்ஜெட்டுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய கோட்பாடான கூட்டாட்சியில், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது" என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE