கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட உருளை வடிவ வடிகால் கண்டுபிடிப்பு

By KU BUREAU

திருப்புவனம்: கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட, உருளை வடிவ வடிகால் கண்டறியப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இங்கு மொத்தம் 12 குழிகள் தோண்ட முடிவு செய்யப்பட்டு, இதுவரை 4 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், நீர் செல்வதற்காக சுடுமண்ணால் செய்யப்பட்ட, உருளை வடிவ வடிகால் நேற்று கண்டறியப்பட்டது. அதில் 7 உறைகள் மிக நேர்த்தியாக, ஒன்றுக்குள் ஒன்றாகப் பொருத்தப்பட்டு உள்ளன. ஒரு சுடுமண் உறை 36 செ.மீ. நீளம், 18 செ.மீ. அகலத்தில் செய்யப்பட்டுள்ளது. வடிகால் மொத்தம் 174 செ.மீ. நீளம் கொண்டதாக அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சி அடுத்த குழி வரை நீள்கிறது.

எனவே, அந்த குழியையும் தோண்டினால்தான் வடிகாலின் முழு நீளம் தெரியவரும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வடிகால் மூலம் கீழடியில் வாழ்ந்த பழந்தமிழர்கள், சிறந்த நீர் மேலாண்மையை கடைப்பிடித்துள்ளது தெரியவருகிறது.

ஏற்கெனவே நடைபெற்ற அகழாய்வு மூலம் இங்கு திறந்தவெளி வடிகால், செங்கற்களால் கட்டப்பட்ட மூடிய வடிகால், சுருள் வடிவிலான குழாய்கள், உறை

கிணறுகள் கிடைத்துள்ளன. இவையனைத்தும் தமிழர்களின் நீர் மேலாண்மைக்குச் சான்றாக உள்ளது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE