இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு எம்எல்ஏ அசோக்குமார் ஆறுதல்

By வீ.சுந்தர்ராஜன்

தஞ்சாவூர்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் இன்று (மே 20 ) ஆறுதல் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் மீனவர்கள் கழுமங்குடா வாஞ்சிநாதன் (22), சேதுபாவாசத்திரம் மகேஷ் (30), உச்சிப்புளி ரஞ்சித் (32) ஆகிய மீனவர்கள் கடந்த 15-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது மழை மற்றும் பலத்த காற்றால் நாட்டுப்படகு திசை மாறி இலங்கை கடல் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இலங்கை கடற்படையினர் மூன்று மீனவர்களையும் கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டம் இளவாழை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் இன்று, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள, சேதுபாவாசத்திரம் மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர், மூன்று மீனவர்கள் மற்றும் படகை பத்திரமாக மீட்க, தமிழக மீன்வளத்துறை அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் இன்று ஆறுதல் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE