துரோகம் செய்தவர்களுக்கு காங்கிரஸில் இடமில்லை: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: "பதவி சுகம், பணத்துக்காக கட்சிக்கு துரோகம் செய்து பாஜகவில் சேர்ந்தோரை எக்காலத்திலும் காங்கிரஸில் சேர்க்க மாட்டோம்" என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு ஜோதி யாத்திரை கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் சார்பாக புதுச்சேரிக்கு இன்று எடுத்துவரப்பட்டது. புதுச்சேரி மாநில ஐஎன்டியுசி தலைவர் பாலாஜி தலைமையில் ரெட்டியார்பாளையத்தில் தனியார் ஹோட்டலில் ராஜீவ்காந்தி திருவுருவபடத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமையப் போகிறது. ராகுல் இந்நாட்டின் பிரதமராக வரப்போகிறார். புதுச்சேரியில் 2026-ல் ஆட்சி மாற்றம் வரவேண்டும். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெல்ல கடுமையாக உழைத்து அர்ப்பணிப்பை காட்டினார்களோ, அதேபோல் சட்டப்பேரவை தேர்தலிலும் பணியாற்ற இன்று ராஜீவ் ஜோதியில் உறுதிமொழி எடுத்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றம் வரவுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, சொத்தைக் காப்பாற்றவும், பாஜகவிடம் கையூட்டு பெற்று காங்கிரஸுக்கு யாரெல்லாம் துரோகம் செய்துவிட்டு ஓடிப் போனார்கள் என்பது புதுச்சேரி மக்களுக்கு தெரியும். காங்கிஸுக்கு துரோகம் செய்து விட்டு கட்சி மாறி பாஜகவில் சேர்ந்தவர்களை எக்காலத்திலும் காங்கிரஸில் இணைக்கக்கூடாது என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். காங்கிரஸ் இருக்கும் ஒரு சிலர் கட்சி மாறிகளுடன் தொடர்பில் உள்ளனர். அந்தத் தொடர்பை துண்டித்துக் கொள்ளவேண்டும்.

ஓடுகாலிகள் எல்லாம் காங்கிரஸுக்கு தேவையில்லாதவர்கள். பதவி சுகம், பணத்துக்காக ஓடியோரை எக்காலத்திலும் காங்கிரஸில் சேர்க்கமாட்டோம். பிரதமர் மோடி ஊழல்வாதி. தேர்தலுக்கு நன்கொடை வாங்கியதே உதாரணம். குறிப்பாக, சிபிஐ , அமலாக்கப்பிரிவு மற்றும் வருமானவரித்துறை வழக்குகளில் சிக்கி உள்ள நிறுவனங்களிடம் ரூ.9,500 கோடியை தேர்தல் நன்கொடையாக வாங்கியுள்ளார் மோடி. வழக்குகளை தள்ளுபடி செய்ய ஊழல் செய்த கம்பெனிகளிடம் நிதி வாங்கியுள்ளனர். அது லஞ்சம். இதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் மீது பொய்க் குற்றச்சாட்டு சொல்லி தலைவர்களை சிறையில் அடைக்கப் பார்க்கிறார் மோடி. இதற்கான முற்றுப்புள்ளி ஜூன் 4-ல் இருக்கும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஊழல் செய்ய வாய்ப்புள்ளது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அதற்கான ஆதாரத்துடன் வாக்களித்தோர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE