கடந்த ஆட்சியின்போது பேரவைக்குள் திமுகவினர் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் 25-ல் விசாரணை

By KU BUREAU

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை வரும் ஜூலை 25-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப் பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு, உரிமை மீறல் நோட்டீஸை அனுப்பியது.

அந்த நோட்டீஸில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.

அதையடுத்து சட்டப்பேரவை உரிமைக்குழு, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.இதை விசாரித்த நீதிமன்றம் இரண்டாவதாக பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸையும் ரத்து செய்தது.

இதை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (ஜூலை 22) தீர்ப்பளிக்கப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ-க்கள் சிலருக்கு இன்னும் இந்த வழக்கு தொடர்பான நோட்டீஸ் சென்றடையவில்லை என்றார்.

அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை, இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது தீர்ப்பளிக்கப்படும் சூழலில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு இன்னும் அரசு தரப்பில் நோட்டீஸே கொடுக்கப்படவில்லை எனக்கூறுவது ஏற்புடையதல்ல. தமிழக முதல்வரைக் காணவில்லை என்றும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அரசு தரப்பில் கூறுவது வேடிக்கையாக உள்ளது. வழக்கை நீர்த்துப்போகச் செய்ய அரசுதரப்பினர் முயன்று வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.

அதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய முதல்வர் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு அரசு தரப்பிலும், அதிமுக தரப்பிலும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் ஜூலை 25-க்கு தள்ளி வைத்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE