கோட்டை ரயில் நிலையம் 3 மாதங்களில் தயாராகிவிடும்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

By KU BUREAU

சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் பணிகள் முடிந்து, 3 மாதங்களில் தயாராகிவிடும். அதன்பிறகு, வேளச்சேரி முதல் கோட்டை ரயில் நிலையம் வரை மின்சார ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே தற்போது 2 பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை இருக்கிறது.

எனவே, சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதை அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று, ரூ.274.20 கோடி மதிப்பில் 4-வது புதிய பாதை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து, எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதைக்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கின. கோட்டை, பூங்கா நகர் ஆகிய ரயில் நிலையங்களில் பறக்கும் வழித்தடத்தில் உள்ள ரயில் தண்டவாளம் அகற்றப்பட்டது.

2 ரயில் நிலையங்களில் நடைமேடை சுவர் இடிப்பு பணியும், கோட்டை ரயில் நிலையத்தில் 3, 4, 5-வது நடைமேடைகள் மற்றும் நடைமேம்பாலம் அகற்றும் பணியும், பூங்கா நகர் நிலையத்தில் கட்டிடம் அகற்றும் பணியும், கூவம் ஆற்றை ஒட்டி, பூமிக்கடியில் கம்பிகள் மூலமாக அடித்தளம் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சென்னை எழும்பூர் - கடற்கரை வரையிலான 4-வது பாதைக்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பல இடங்களில் ரயில் தண்டவாளம் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, கோட்டை ரயில் நிலையத்தை ஒட்டி, ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ஒரு பெரிய பாலப் பணியும், 7 சிறிய பாலப்பணிகளும் முடிந்துள்ளன. ரயில்வே தண்டவாளத்தின் ஒரு பகுதி கூவம் ஆற்றை ஒட்டி வருகிறது. இங்கு கம்பிகள் வாயிலாக அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தடுப்புசுவர் அமைக்கும் பணியும் முடிந்துள்ளது.

கோட்டை ரயில் நிலையம் அடுத்த 3 மாதங்களில் தயாராகி விடும். அதன்பிறகு, வேளச்சேரி -கோட்டை இடையே மின்சார ரயில் இயக்கப்படும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE