இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்கள் 29 பேருக்கு ஜூலை 29-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

By KU BUREAU

ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஜூலை 29 வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 30 அன்று கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன், ஜார்ஜ் ஆகியோருக்கு சொந்தமான 3 நாட்டுப்படகுகள், நம்புதாளை கடற்பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற ஒரு நாட்டுப்படகு என மொத்தம் 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற சிபிராஜுக்கு சொந்தமான படகில் சென்ற பார்த்திபன் (32), முரளி (42), சாரதி (28),ராமதாஸ் (52) ஆகிய 4 மீனவர்களும் இலங்கை கடற்படையால் ஜூன் 17 அன்று கைது செய்யப்பட்டனர்.

இந்த 29 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு: இந்நிலையில், நேற்று மீனவர்கள் 29 பேரும் ஊர்காவல் துறைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், மீனவர்களின் காவலை ஜுலை 29 வரை நீட்டித்துஉத்தரவிட்டதை அடுத்து மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE