போதைப் பொருள்களை கட்டுப்படுத்தக் கோரி அதிமுகவினா் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் @ பல்லாவரம்

By பெ.ஜேம்ஸ் குமார்

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்லாவரம் தொகுதி அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு இன்று விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் மாநிலம் முழுவதும் ஏற்கெனவே ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமியின் அறிவுரை என்ற பெயரில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி பல்லாவரம் பகுதியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட அதிமுக துணை செயலாளரும், முன்னாள் பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ப.தன்சிங் தலைமை வகித்தாா். பல்லாவரத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பல்லாவரம் பகுதி செயலாளர் த.ஜெயபிரகாஷ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

அதிமுக சார்பில் விநியோகம் செய்யப்பட்ட பிரசுரத்தில் தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள், கஞ்சா, போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத திமுக அரசைக் கண்டித்து வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதேபோல் பம்மலில் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் அப்பு வெங்கடேசன் தலைமையில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE