ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

By KU BUREAU

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5-ம் தேதி, பெரம்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் அவரது வீட்டின் முன் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இந்த 11 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்டவர்களின் ஒருவரான திருவேங்கடத்தின் வங்கிக் கணக்குகளில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான பணம் செலுத்தப்பட்டதை போலீஸாருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் திருவேங்கடத்தின் வீட்டருகே புதைக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து அது தொடர்பாக விசாரணை செய்வதற்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவேங்கடத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) அதிகாலை போலீஸார் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். சரியாக 5.30 மணியளவில் வெஜிடேரியன் வில்லேஜ் என்ற பகுதியில் போலீஸாரின் கவனத்தை திசை திருப்பி திருவேங்கடம் தப்பித்து ஓடியதாகக் கூறப்படுகிறது.

தங்களிடமிருந்து தப்பித்து வெஜிடேரியன் வில்லேஜ் பகுதிக்குள் நுழைந்த திருவேங்கடத்தை போலீஸார் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது திருவேங்கடம் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி ஒன்றை எடுத்து காவல் துறையினரை சுட முயற்சித்தாகவும், இதனால் தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கியால் இருமுறை சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் திருவேங்கடத்தின் இடது நெஞ்சுக்கு அருகேயும் வயிற்று பகுதியிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன.

இதில் திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். என்கவுன்ட்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் உடல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. திருவேங்கடத்தின் மீது ஏற்கெனவே, 2015 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் தென்னரசு கொலை வழக்கு உட்பட மூன்று கொலை வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE