சென்னை | இரும்பு பலகை விழுந்து வடமாநில பெண் தொழிலாளி உயிரிழப்பு

By KU BUREAU

சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை பலத்த காற்று வீசியபோது இரும்பு பலகை விழுந்து வடமாநில பெண் தொழிலாளி உயிரிழந்தார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் விஷ்ணு (35). இவரது மனைவி ரேணுகா (30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஷ்ணு, தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். ரேணுகா, தரமணி 100 அடி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டு மாதங்களாக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரேணுகா வேலை முடிந்து, வீட்டுக்கு புறப்பட்டார்.

தனியார் நிறுவன வளாகத்துக்குள் அவர் நடந்து சென்ற போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகம் மேலும் அதிகரித்ததால், தரையில் கிடந்த இரண்டு இரும்பு பலகைகள் ரேணுகா மீது பறந்து வந்து விழுந்தது. இதில் ரேணுகாவுக்கு வயிறு மற்றும் இடுப்பு எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக ரேணுகா ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை ரேணுகா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தரமணி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE