பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு குற்றப்பத்திரிகை நகல்: விசாரணையை முதன்மை அமர்வு தள்ளிவைப்பு

By KU BUREAU

சென்னை: வீட்டுப் பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை வழக்கில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளுக்கு குற்றப்பத்திரிகை நகலை வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணனும் அவரது மனைவி மார்லினாவும் திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர்களது வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த இளம்பெண் போலீஸில் புகார் அளித்தார்.

அதன்பேரில் கணவன், மனைவி இருவர் மீதும் திருவான்மியூர் போலீஸார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும் கடந்த ஜன.25-ம் தேதி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரின் மனைவி மார்லினாவுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, விசாரணையை வரும் ஜூலை 22-க்கு தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE