“விவசாயிகளுக்கான ஆழ்துளை கிணறு, மின் மோட்டார் மானியத்தை உயர்த்திடுக” - ஜி.கே.வாசன் 

By KU BUREAU

சென்னை: “ஆண்டு முழுவதும் மழை, வெயில் என எக்காலத்திலும் விவசாயம் செய்ய தண்ணீர் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்பதற்காக இடத்துக்கு ஏற்ப புதிய கிணறு அல்லது புதிய ஆழ்துளை கிணறு ஆகியவைகளை அமைக்க விவசாயிகளுக்கு மானியத்தை உயர்த்தி கொடுத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு, விவசாயிகள் எதிர்பார்க்கும் மானியத்தை வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு மின்சக்தி அல்லது சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளை நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்றவற்றிற்கு தேவையான மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

குறிப்பாக ஆழ்துளை கிணறு அமைக்க சுமார் ரூ. 9 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும், மின்மோட்டார் அமைக்க ரூ.75 ஆயிரம் வரையும் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆழ்துளை கிணறு அமைக்க, மின்மோட்டார் அமைக்க வேளாண்துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மானியமாக சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இது போதுமானதல்ல என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இன்றையச் சூழலில் விவசாயத்தில் ஏற்படும் நஷ்டம், பொருளாதாரமின்மை ஆகியவற்றாலும், விவசாயத்துக்கு தண்ணீர் தேவையான அளவுக்கு காலத்தே கிடைக்காததாலும் விவசாயத்துக்காக ஏற்கெனவே வழங்கும் மானியத்தை உயர்த்தி வழங்கினால் ஓரளவுக்கு விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும்.

அதாவது ஆண்டு முழுவதும் மழைக்காலம், வெயில்காலம் என எக்காலத்திலும் விவசாயம் செய்ய தண்ணீர் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்பதற்காக இடத்துக்கு ஏற்ப புதிய கிணறு அல்லது புதிய ஆழ்துளை கிணறு ஆகியவற்றை அமைக்க விவசாயிகளுக்கு மானியத்தை உயர்த்தி கொடுத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

விவசாயிகள் பம்பு செட் அமைக்கவும், மோட்டார், பைப்லைன், ஆழ்துளை கிணறு அமைக்கவும் மற்றும் நீர் பாசனத்துக்கு தேவையான அனைத்து கருவிகளை வாங்கவும், டிராக்டரை விருப்பப்படும் நிறுனங்களில் வாங்கவும், இவைகளுக்கான மானியத்தை உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE