ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துபட்டி தெருவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நாச்சியார் (85) மீது மேற்கூரை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி அவர் உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு மடத்துப்பட்டி தெருவை சேர்ந்த வள்ளிநாயகம் என்பவரது மனைவி நாச்சியார்(85). வள்ளிநாயகம் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் நாச்சியார் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு 10:30 மணி அளவில் நாச்சியார் அருகே வசிப்பவர்களிடம் பேசிவிட்டு, வீட்டிற்கு தூங்கச் சென்றார். இன்று காலை அக்கம்பக்கத்தினர் எழுந்து பார்த்த போது நாச்சியார் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து கிடந்தது.

உள்ளே இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் நாச்சியார் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கி இருந்த நாச்சியாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE