மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியர்கள் பள்ளிகளுக்குத் திரும்ப உத்தரவு!

By சி.பிரதாப்

மாவட்டக் கல்வி அலுவலகங்கள், மாவட்டத் திட்ட அலுவலகங்களுக்கு மாற்றுப் பணியில் சென்ற தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய பணியிடங்களுக்கு மாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: ‘மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலகங்களில் (அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி நிலையில்) பணிபுரியும் 59 உதவித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்டத் திட்ட அலுவலகங்களில் (பட்டதாரி ஆசிரியர் பணி நிலை) பணிபுரிந்து வரும் 67 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக அவர்கள் தாய் துறைக்கு அனுப்பி வைக்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த 59 உதவித் திட்ட அலுவலர்கள், 67 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் அந்தந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் வழங்குமாறு அரசு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE