ஜாபர் சாதிக் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் அமலாக்க துறை தரப்பில் வாதம்

By KU BUREAU

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென அமலாக்கத்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்தியதாக, திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மார்ச் 9-ம் தேதி கைது செய்தனர்.

டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையினரும் தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், அமலாக்கத்துறை தன்னை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், போதைப் பொருள் கடத்தல் வழக்குக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தன் மீது தவறான உள்நோக்கத்துடன் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, தன்னை சட்டவிரோதமாக கைது செய்ததை சட்டப்பூர்வமாக்கும் வகையில் அமலாக்கத் துறையினர் திஹார் சிறையில் உள்ள தனக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கைதுக்கான வாரன்ட் பெற்றுள்ளனர் என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசுவழக்கறிஞர் என்.ரமேஷ், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்ததற்கு எதிராக ஜாபர் சாதிக் தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே, அதுதொடர்பான வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், வழக்கை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE