சென்னையில் ஆறு, கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்!

By ச.கார்த்திகேயன்

சென்னை மாநகராட்சி சார்பில் ஓட்டேரி கூவம் உள்ளிட்ட ஆறுகளிலும், கால்வாய்களிலும் ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் ஒழிக்கவே முடியாத பிரச்சினையாக கொசுத் தொல்லை இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக, இயற்கையாகவே கொசுத் தொல்லையும், உற்பத்தியும் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், கடந்த மே 30 ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 7-ம் தேதி வரை வழக்கமாக 81 மி.மீ மழை மாநகருக்கு கிடைக்கும். ஆனால் இந்த முறை 272 மி.மீ மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 234 சதவீதம் அதிகம். இதன் காரணமாக, சென்னையில் உள்ள கூவம் உள்ளிட்ட ஆறுகள் மற்றும் கால்வாய்களில் மீண்டும் கொசு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது, "பொதுவாக தொடர்ந்து மழை பெய்தால், கொசு உற்பத்தி தொடங்கும். பருவமழைக்கு முன்பாகவே, மாநகரம் முழுவதும் வீடு வீடாகவும், காலி இடங்களிலும் சோதனை நடத்தி கொசு உற்பத்தி ஆதாரங்களான தேங்காய் கழிவுகள், பயன்படுத்தாத டயர்கள் உள்ளிட்டவற்றை அகற்றி இருக்கிறோம். குடியிருப்புப் பகுதிகளிலும் தேவையான இடங்களில் கொசு புகை மருந்து பரப்பப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் 30-க்கும் மேற்பட்ட கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றிலும், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்றவற்றிலும் கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்த தற்போது ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளை தொடங்கி இருக்கிறோம். மொத்தம் 6 ட்ரோன்களைக் கொண்டு இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE