காஞ்சிபுரம் அருகே குப்பையில் கிடந்த துப்பாக்கி - போலீஸார் கைப்பற்றி தீவிர விசாரணை

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் பகுதியில் கை துப்பாக்கி (பிஸ்டல்) போன்ற ஒன்று குப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், துப்பாக்கியை கைப்பற்றி மணிமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை புறநகர் பகுதியில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ரவுடிகளை ஒடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் ரவுடிகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. சமீபத்தில் போலீஸார் இரண்டு ரவுடிகளை காலில் சுட்டு பிடித்தபோது, அதில் ஒருவரிடம் துப்பாக்கி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரவுடிகளின் கைகளில் ஆயுதங்கள் இருப்பது சமூக அமைதிக்கு பெரும் ஆபத்து என்றும், ஆயுதங்களுடன் திரியும் ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் உள்ள கொருக்கன்தாங்கல் பகுதியில் ஒரு வீட்டின் அருகே கிடந்த குப்பையில் துப்பாக்கி போன்ற ஒன்று இருந்தது. அது பார்ப்பதற்கு பிஸ்டல் மாடலில் இருந்ததால் அந்தப் பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து மணிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மணிமங்கலம் போலீஸார், அந்த துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை செய்தனர். ஆதனூர் ஊராட்சிக்கு அருகாமையில் பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

இந்த துப்பாக்கி எந்த வகையைச் சேர்ந்தது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை செய்தனர். பின்னர் இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “இது ரிவால்வர் போல் தோற்றத்தில் இருக்கும் கை துப்பாக்கி. இந்த துப்பாக்கி பிளாஸ்டிக்கால் ஆனது. இத்துப்பாக்கி யாரையேனும் மிரட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE