90 போலீஸாரை நேரில் வரவழைத்து பிறந்தநாள் பரிசு வழங்கிய சென்னை காவல் ஆணையர்!

By இ.ஜெகநாதன்

சென்னை: சென்னை காவல் ஆணையர் 90 போலீஸாரை நேரில் வரவழைத்து பிறந்தநாள் பரிசு வழங்கினார்.

சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் போலீஸார், மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பிறந்த நாட்களை முன்னிட்டு சென்னை காவல்துறை சார்பில் அவர்களை நேரில் வரவழைத்து பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப் பொருள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 04.07.2024 முதல் 09.07.2024 வரை பிறந்தநாள் கொண்டாடும் 90 போலீஸார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை நேரில் வரவழைத்து பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுகள் வழங்கி, பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார்.

மேலும், பிறந்தநாள் காணும் காவல் அலுவலர்களுக்கு அன்றைய தினம் விடுப்பு அளிப்பதுடன், காவல் கட்டுப்பாட்டறையிலிருந்து வான் செய்தி மூலம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளும் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், சென்னை பெருநகர காவல் அலுவலர்கள், காவல் ஆணையரிடம் நேரிடையாக வாழ்த்துப் பெற்றதுடன், குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடும் வகையில் அவர்களுக்கு அன்றைய தினம் ஊதியத்துடன் விடுப்பும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின்போது, சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் (தலைமையிடம்) கயல்விழி, துணை ஆணையர் (நிர்வாகம்) அதிவீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE