5000 ஆண்டுகள் பழமையான கற்குழிகள்: உத்திரமேரூர் பகுதியில் கண்டுபிடித்த வரலாற்று ஆய்வாளர்கள்!

By பா.ஜெயவேல்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியில் சாலவாக்கம் கிராமம் உள்ளது. இக்கிராம காடுகளுக்கு அருகில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களைத் தீட்டப் பயன்படுத்திய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் கூறுகையில், “இப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் எடமிச்சி காட்டுப் பகுதியில் கள ஆய்வு செய்தோம். அப்பகுதியில் உள்ள அமரக்கல்குன்று மற்றும் அங்குள்ள பாறைகளில் புதிய கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களைப் பட்டை தீட்டிய வழவழப்பான கற்குழிகள் காணப்படுகின்றன. புதிய கற்காலம் என்பது வேட்டை சமூகமாக இருந்த ஆதி மனிதர்கள் தட்பவெப்ப சூழலாலும், உணவை தேடியும் நாடோடிகளாக ஓடித் திரிவது முடிந்து ஓர் இனக் குழுவாக ஓரிடத்தில் தங்கி வாழ்வை தொடங்கிய காலம் எனக் கொள்ளலாம். கி.மு. 3000லிருந்து கி.மு. 10000 வரை என புதிய கற்காலம் என அழைக்கப்படும் காலத்தைச் சேர்ந்தவையாக இந்த கற்குழிகள் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதன் அடிப்படையில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாக இந்த கற்குழிகள் இருக்கும் என நாங்கள் கணிக்கிறோம்.

கற்குழிகள்

ஆதிமனிதர்கள் முதலில் வேட்டைக்காக மரங்கள் மற்றும் எலும்புகளால் ஆன கருவிகளைப் பயன்படுத்தினர். அது பயன்பாட்டில் நாளடைவில் சிதைந்தும் அழிந்தும் போயின. இதற்கு மாற்றாக நிலைத்து நிற்கக்கூடிய வகையில் எளிதில் சிதையாத கல் ஆயுதங்களைப் பயன்படுத்த தொடங்கினார்கள். அந்த ஆயுதங்கள் சொரசொரப்பாக இருந்தது. இதனால் வேட்டையாடுவதிலும் பயன்படுத்துவதில் பல சிரமங்கள் தோன்றின. அதைக் களைவதற்காக வேட்டைக் கருவிகளை வழுவழுப்பாகப் பட்டை தீட்டத் தொடங்கினார்கள். அவ்வாறு பட்டை தீட்டவும் கூர் செய்வதற்கும் நீர் தேவைப்பட்டது. அதனால் நீர் தேங்கும் மலைப் பகுதிகளையும் பாறைகளையும் தேர்வு செய்துள்ளார்கள். அதன் காரணமாகவே நீர் தேங்கும் அளவிலான சுனைகளைக் கொண்ட இந்த அமரக்குன்று மற்றும் நீர் தேங்கும் வசதிகள் உள்ள இந்த பாறைகளைப் பயன்படுத்தி உள்ளார்கள்.

அவ்வாறு பட்டை தீட்டிய கற்குழிகளைத்தான் நாங்கள் கண்டறிந்துள்ளோம். அப்பகுதிகளில் உள்ள பாறைகளில் 9 இடங்களில் கற்குறிகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே இந்த இடத்தில் ஓர் இனக் குழுவாக புதிய கற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்து இருக்க வாய்ப்புள்ளது. இந்த இடங்களுக்கு அருகிலேயே பெருங்கற்கால மனிதர்களின் ஈமச் சின்னங்களான கல் வட்டங்கள் மற்றும் கல்திட்டைகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கின்றன. எனவே தமிழகத் தொல்லியல் துறை இந்தப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்” என்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE