நெல்லுக்கான தமிழக அரசின் ஊக்கத்தொகை போதுமானதல்ல: தமாகா கருத்து

By KU BUREAU

சென்னை: நடப்பாண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை போதுமானதல்ல என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு நடப்பாண்டின் காரீப் கொள்முதல் பருவத் தில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளது.

மேலும் நேரடி கொள்முதல் நிலையங்களில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450-ம் கொள்முதல் விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை போதுமானதல்ல.

திமுக தேர்தல் வாக்குறுதியான குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்பது அடுத்த ஆண்டில் வழங்கப்படும் என அறிவித்திருப்பது காலம் கடந்த ஒன்றாக அமையும். எனவே தமிழக அரசு நடப்பாண்டிலே குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500-ஐ வழங்க முன்வர வேண்டும்.

தொடர்ந்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவதை கவனத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE