மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

By KU BUREAU

சென்னை: இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்துடன், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதம்: இந்தியாவில் சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி கடந்தாண்டு அக்.20-ம் தேதி ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தேன். அதில் சாதிவாரி மக்கள் தொகைகணக்கெடுப்புடன் 10 ஆண்டுமக்கள் தொகை கணக்கெடுப்பை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின் பதிவு-69-ல் "மக்கள் தொகை கணக்கெடுப்பு" மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டப்படி நடத்தப்படுகிறது.

அதேபோல், தற்போது, பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் சாதிவாரியான மற்றும் பழங்குடி வாரியான தரவுகள் மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின்கீழ் கணக்கிடப்படுகிறது.

நமது நாடு வளரும் நாடு என்ற முறையில், வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும், குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களைச் சென்றடைய வேண்டும் என நான் கருதுகிறேன்.

பின்தங்கிய மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கொள்கைகளை வகுக்கவும், மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் எப்போதும் அடிப்படையாக இருக்கும். மேலும், இந்தியா போன்ற ஒரு நாட்டில், சமூகச் சூழல் என்பது பல்வேறு சமூகங்களின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. சமூக முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை வரலாற்று ரீதியாக நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக சாதி இருந்துவருவதால், சாதி அடிப்படையிலான சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு தரவுகள் பொதுக்களத்தில் கிடைக்கச் செய்வது அவசியம்.

மேலும், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையிலிருந்து பெறப்பட்ட சரிபார்க்கக்கூடிய சமூகப் பொருளாதார குறியீடுகளின் அடிப்படையில் சட்டங்கள் இயற்றப்படும்போது, அவை சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் தன்மையைப் பெறும்.

இருப்பினும், 1931-ல் இந்தியாவில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு சமகால தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வகைப்படுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில், மாநிலத்தின்மொத்த மக்கள் தொகையில் உள்ள பல்வேறு சாதிகள், சமூகங்கள் மற்றும் பழங்குடியினரின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி நிலை தொடர்பான அளவிடக்கூடிய தரவுகளின் தேவைவலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தேசிய பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒருங்கிணைத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் ஜூன் 26-ம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை இணைத்து அனுப்பியுள்ளேன். இதுகுறித்து தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE