தாம்பரம் சேலையூரில் பஞ்சு கடையில் தீ விபத்து: பேக்கரி, உணவகமும் தீயில் நாசம்

By பெ.ஜேம்ஸ் குமார்

தாம்பரம்: சேலையூர் காவல் நிலையம் அருகில் வெல்டிங் கடையில் ஏற்பட்ட தீப்பொறி பஞ்சு கடையில் சிதறி ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாயின.

தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் சேலையூர் காவல் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான பேக்கரி மற்றும் உணவகம் இயங்கி வருகிறது. இதன் அருகே பஞ்சு கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் பஞ்சு கடையின் அருகே இன்று வெல்டிங் வேலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. வெல்டிங் வேலை செய்த போது அதிலிருந்து வெளியேறிய தீப்பொறி பஞ்சு கடையிருந்த பஞ்சில் பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பஞ்சு கடை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

உடனடியாக கடையில் வேலை செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளியில் ஓடி வந்து நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். பஞ்சு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதில் அருகில் இருந்த பேக்கரி மற்றும் உணவகத்திலும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை அடுத்து அருகில் இருந்தார்கள் உடனடியாக தாம்பரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மூன்று கடைகளிலும் ஏற்பட்ட தீயை போராடி கட்டுப்படுத்தினர். இந்தத் தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனால் தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE