போதைப் பொருட்களை தடுக்க தொலைநோக்குடன் அரசு செயல்பட வேண்டும்: முத்தரசன்

By என்.சன்னாசி

மதுரை: மதுரை உத்தங்குடியில் தமிழ் மாநில விவசாயி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாநில அளவில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்தியாவில் தலைசிறந்த மருத்துவர் உருவாக்க வேண்டும் என, நீட் தேர்வு கொண்டு வந்ததாக கூறுகின்றனர். இத்தேர்வுக்கு முன்னதாகவே தலை சிறந்த மருத்துவர்கள் சேவை ஆற்றுகின்றனர். இவ்வாண்டு நடந்த நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகளுடன் நடந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தீவை மீட்டு தமிழ்நாடுடன் இணைக்க வேண்டும். தமிழகத்திலுள்ள ஒரு கோடி மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான உரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு 5 ஒரு பங்கு நிதி மட்டுமே தற்போது வழங்குகிறது. நிதியை காரணம் காட்டி தமிழகத்தில் அத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மனிதாபிமான முறையில் நிவாரணம் வழங்கப்படுகிறது. குடும்ப உறவுகளை இழந்தவர்களுக்கும் நிவாரணமும் வழங்கப்படுகிறது, தமிழகத்தில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்க, தமிழ்நாடு அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க, உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டால் அம்மாவட்டத்தின் ஆட்சித் தலைவரையும், காவல் துறை அதிகாரியும் பொறுப்பேற்க வேண்டும், கள்ளச் சாராய விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறையினர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யவேண்டும். இவ்விவகாரத்தை வைத்து அதிமுகவும், பாஜகவும் அரசியல் செய்கிறது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் பதவி விலக வேண்டும் என, அறிக்கை விடவேண்டும் என, அதிமுகவும் பாஜகவும், நினைக்கிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் எடப்பாடி பழனி்சாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும். கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் குரல் கொடுத்திப்போம். இந்த விவகாரத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். உயிரிழப்புகளுக்கு காரணம் காவல்துறை மற்றும் மதுவிலக்கு காவல்துறையிலுள்ள கருப்பு ஆடுகள் தான். சாராய வியாபாரிகளிடம் இருந்து வாரம்தோறும் பணத்தை பெற்றுக் கொண்டு ஊக்கு விக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் 15 ஆண்டாக பணியாற்றிய காவல் துறையினர் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பாஜக முதல்வரை சந்திகாமல் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கின்றனர். ஆளுநர் ஆட்சியை கலைத்து விடுவாரா?, அப்படி ஆட்சியை கலைத்தால் நாங்கள் எல்லாம் சும்மா விட்டு விடு வோமா?, எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலையும், மலிவான அரசியலை செய்கின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது" என முத்தரசன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE