தமிழகம் முழுவதும் நாளை பாஜக ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைபோல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த 19-ம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய, முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தால் பறிபோனதற்குப் பின்னரும், முதல்வராக தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டுவரும் திமுக அரசைக் கண்டித்து, ஜூன் 22-ம் தேதி (நாளை) தமிழக பாஜக சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE