மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

By KU BUREAU

மதுரை: மறுவாழ்வு வசதிகள் செய்துகொடுக்கும் வரை மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் 2 தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட்டில் வசித்து வருகிறோம். மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் 700 குடும்பங்கள் வசிக்கின்றன.

தேயிலைத் தோட்டத்துக்கான குத்தகைக் காலம் 2028-ம் ஆண்டு பிப். 11-ம் தேதி முடிகிறது. குத்தகைக் காலம் முடிந்த பிறகு தேயிலைத் தோட்ட நிலம், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியின் கீழ் அரசிடம் ஒப்படைக்கப்படும்.

இந்நிலையில், குத்தகைக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே, பிபிடிசி நிறுவனம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கிஉள்ளது. ஆக. 7-க்கு முன்பே வெளியேற வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தாமாக முன்வந்து ஓய்வு பெறும் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.1.40 லட்சம் முதல் 2.80 லட்சம்வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், 60 வயதை தொட்டவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.

மாஞ்சோலை தொழிலாளர்கள் சொந்த இடம், வீடு இல்லாமல் உள்ளனர். பலர் 4 தலைமுறைகளாக மாஞ்சோலையில் வசிக்கின்றனர். தற்போது அவர்களை அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதால், செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை செய்யக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்த பதிலும் வரவில்லை. எனவே, தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் 700 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி, அதில் கலைஞர் கனவுஇல்லத் திட்டத்தில் வீடு கட்டவும்,தொழிலாளர்களுக்கு கன்னியாகுமரி அரசு ரப்பர் தோட்டக் கழகம்,களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம், குடும்பத்தில் ஒருவருக்கு அங்கன்வாடிகளில் பணி வழங்கவும், குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவசக் கல்வி வழங்கவும், மாற்றுப்பணி வழங்கும் வரை ஒரு குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி(பொறுப்பு) ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய், வழக்கறிஞர் பினேகாஸ் வாதிடும்போது, இலங்கைத் தமிழர்கள் பலருக்கு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அரசு ரப்பர் கழகத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு போன்றவற்றை வழங்க வேண்டும் என்றனர்.

அரசுத் தரப்பில், மாஞ்சோலையில் தேயிலைத் தோட்டம் நடத்தி வரும் பிபிடிசி நிறுவனம் தனியார் நிறுவனம் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளைச் செய்து தரும் வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். விசாரணை ஜூன் 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE