உபரி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் மட்டுமே பணிநிரவல்: தொடக்க கல்வி துறை அதிகாரிகள் விளக்கம்

By KU BUREAU

சென்னை: அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றிய அளவில் மட்டுமே பணிநிரவல் செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 31,336 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதில் உபரியாக உள்ள பணியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநிரவல் செய்யப்படும்.

அதன்படி 2023 ஆகஸ்ட் 1-ம்தேதி நிலவரப்படி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2,236 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இவர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு மே28-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பான உத்தரவில், ‘‘தற்போது நடைபெற்று வரும்மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு பணிநிரவல் நடத்தப்பட உள்ளது. எனவே, குறைந்தமாணவர்கள் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தி இருந்தது.

இதுதவிர மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் செய்யும் பட்சத்தில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும் என்று ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றிய அளவில் மட்டுமே பணிநிரவல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘உபரி ஆசிரியர்களுக்கு மாவட்டம்விட்டு மாவட்டம் பணி நிரவல் இல்லை. ஒன்றிய அளவில் மட்டுமேநடைபெறும். எனவே, ஆசிரியர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அதேபோல், கடந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் இந்தாண்டும் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE