தமிழகத்தில் 22-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19 முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலைவழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன் ஹீட் வரை உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரியை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 20-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE